மன்னார்குடி.,
மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் உள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அலங்கார மேலமாரியம்மன் என்கிற ஸ்ரீ நாட்டலங்கார மேலமாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆவணி முளைப்பாரி உற்சவம் நடைபெற்றது. நெடுவாக்கோட்டை சாவடியில் இருந்து மேளதாளங்கள் மற்றும் வாணவேடிக்கைகள் முழங்க முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் முளைப்பாரியை தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து அண்ணாமலைநாதர் கோவில் குளத்தில் முளைப்பாரிகளை கரைத்து, வேண்டுதல்கள் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதையடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை பால்குடம், காவடி, மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், இரவு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.