எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று பெயர்ந்து வருவதாக குற்றம் சாட்டிய மக்கள்,திடீர் சாலை மறியல்.முழுமையாக சீரமைக்க வேண்டும் என பணிகளையும் தடுத்து நிறுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புங்கனூர் முதல் ஆதமங்கலம் சாலை உள்ளது. இந்த சாலையை ஆதமங்கலம், காடாகுடி, புங்கனூர், பெருமங்கலம், ரெட்டி கோடங்குடி, மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். சேதம் அடைந்திருந்த இந்த சாலை
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்க அரசு ஆணையிட்டது அதன்படி புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரை புதிய சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதம் ஆகிறது.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்றதாகவும், ஒரே மாதத்திற்குள் தார்கப்பி பெயர்ந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் புங்கனூர் பகுதியில் மட்டும் சேதமடைந்த சாலையை மீண்டும் சீரமைப்பதற்காக இன்று பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த ஆதமங்கலம், புங்கனூர், ரெட்டி கோடங்குடி, காடாகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பணியை தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் பொழுது புதிதாக புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு போடப்பட்ட சாலையை மீண்டும் சீரமைத்து தர வேண்டும். சாலையை தரமாக அமைக்காத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் மற்றும் சீர்காழி ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பேச்சு வார்த்தை ஈடுபட்டனர். அப்பொழுது புங்கனூர் முதல் ஆதமங்கலம் வரை சேதமடைந்த சாலையை மீண்டும் சீரமைத்து தரப்படும் என தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் போராட்டக்காரர்கள் கூறுகையில் ஆதமங்கலம் முதல் புங்கனூர் வரை புதிதாக போடப்பட்ட சாலை தரமற்றதாக இருப்பதன் காரணமாக காப்பிகள் பெயர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. இந்த சாலையை முழுமையாக மீண்டும் சீரமைத்து தர வேண்டும் இல்லையென்றால் காவல்துறை அனுமதியோடு வைத்தீஸ்வரன் கோவில் கடைவீதி சிதம்பரம்- மயிலாடுதுறை சாலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *