திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மஞ்சப்பை விழிப்புணர்வு நாள்காட்டி வெளியிட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார்,
நல்லாசிரியர் சூரியகுமார், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியின் சார்பாக தயாரிக்கப்பட்ட “மஞ்சப்பையை கையில் எடுப்போம் சுற்றுச்சூழல் காப்போம் ” “அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம் ” போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நாள்காட்டி வெளியிடப்பட்டது. தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் நாள்காட்டியை வெளியிட தென்குவளவேலி இளைஞர் அமைப்பினர் மற்றும் ஆலங்குடி சாய்கிளினிக் ஜெயசீலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் கூறியதாவது:- நாள்காட்டியில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மாணவர் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்த விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
இது பற்றி பெற்றோர்கள் அறிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்த நாள்காட்டி மூலம் ஏற்படுத்தி இருக்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ரேணுகா, விஜயகுமாரி, இளையராஜா, ராமமூர்த்தி, சுதா, பள்ளி அலுவலக உதவியாளர் சுவாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.