திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் ஏஜடியுசி சுமை பணி ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்துள்ள பணிகள் குறித்து ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் பேசினார், மாவட்ட செயலாளர் கே. கேசவராஜ் மாவட்ட முடிவுகளை பற்றி எடுத்துரைத்தார்,
முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ். உதயகுமார் கட்சியின் அமைப்புகளை பற்றி பேசினார். கூட்டத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் திருச்சி – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாங்குடியில் தொடர் விபத்தினை தடுத்திட மேம்பாலம் அமைத்திட வேண்டும், நார்த்தாங்குடி, கிளியூர், குருவாடி ஆகிய பகுதிகளில் தாழ்வாக உள்ள கிராம சாலைகளை தேசிய நெடுஞ்சாலையோடு சமப்படுத்தி தர வேண்டும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் குருவாடி என்ற இடத்தில் நெடுங்காலமாக மக்கள் பயணித்து செல்லும் சாலையின் மேல் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அமைந்துள்ளதால் கதிர் மிஷின் செல்வதற்கும் (விவசாயப்பணி), முதியோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் செல்வதற்கும்,108 ஆம்புலன்ஸ் வருவதற்கும், வீடு கட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்கான வழியும் இல்லை. தெட்சிணாமூர்த்தி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வழி இல்லாமல் இறந்துவிட்டார்.
மருத்துவமனைக்கும் செல்ல முடியவில்லை, காய்கறி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் இடமாக நீடாமங்கலம் அமைந்துள்ளது. ஆகவே சர்வீஸ் சாலை அமைத்திட வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 21- ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கட்சி ஒன்றிய துணைச் செயலாளர்கள் செல்வராஜ், பாக்கியராஜ், ஒன்றிய பொருளாளர் கலியமூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் கிளை செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.