கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு(Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 02.03.2026 முதல் 27.03.2026 வரை கரூர் மாவட்டத்தில் 47 தேர்வுமையங்களில் 103 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 5039 மாணவர்களும், 5521 மாணவியர்களும் தனித்தேர்வர்களாக 306 மாணவ, மாணவிகளும் ஆக மொத்தம் 10866 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுத உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மேல்நிலை முதலாமாண்டு (Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுக்காக ஒரு இடத்தில் வினாத்தாள்கட்டுக் காப்புமையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் கட்டுககாப்பகத்தில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேல்நிலை முதலாமாண்டு(Arrear) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 47 தலைமை ஆசிரியர்களும், 47 துறை அலுவலர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்ற 630 ஆசிரியர்களும், பறக்கும்படை அலுவலர்களாக 110 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இணை இயக்குநர் தலைமையிலும் பறக்கும்படை அமைக்கப்படவுள்ளது.
இத்தேர்வுக்காக கரூர்மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின் படி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புத்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சார வாரியத்தின் மூலமாக தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் தேர்வெழுத மையங்களுக்கு வந்து செல்ல பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்டஆட்சித் தலைவர் தலைமையிலும்,கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வர்.
தேர்வு மையங்களில் தேர்வுகளைப் பார்வையிடும் அதிகாரிகள், பறக்கும் படையினர் தங்கள் குறிப்புகளைஆலோசனைகளைப் பதிவு செய்ய பதிவேடு ஒன்று வைக்கப்படும். ஒவ்வொரு தேர்வுமையத்திலும் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டியும் வைக்கப்படும் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் ஆழ்ந்த கவனத்துடன், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு நேரங்களில் மனஅமைதியுடனும், தைரியத்துடனும், ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடாமல் சிறப்பாக தேர்வுகளை எழுதிட மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கு.விமல்ராஜ் தெரிவித்தார்