கோவையில் டோனி பொன்னையா இன்டர்நேஷனல் கராத்தே கோப்பை –2026 போட்டி ஈச்சனாரி பகுதியில் தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.இதில் , முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கராத்தே போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, சிறப்பாக விளையாடி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.கட்டா மற்றும் குமித்தே ஆகிய இரு பிரிவுகளிலும் பல்வேறு வயது மற்றும் எடைப் பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் மலேசியா,தாய்லாந்து,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கராத்தே வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டி முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.நிகழ்ச்சியில், கடந்த 50 ஆண்டுகளாக கராத்தே கலையை வளர்ப்பதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் டோனி பொன்னையாவிற்கு , அவரது வாழ்நாள் சாதனையையும் விளையாட்டுத் துறைக்கான பங்களிப்பையும் பாராட்டி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருது வழங்கி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
முன்னதாக தலைமை பயிற்சியாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,, “கராத்தே என்பது வெறும் தற்காப்புக் கலை மட்டுமல்ல; ஒழுக்கம், கட்டுப்பாடு, தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியை வளர்க்கும் வாழ்க்கை முறையாகும். இன்றைய இளம் தலைமுறையினர் விளையாட்டுடன் தற்காப்புக் கலைகளையும் கற்றுக்கொள்வது காலத்தின் தேவையாக இருப்பதாக அவர் கூறினார்..
போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கராத்தே பயிற்சியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.