12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை., உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ்-காளீஸ்வரி தம்பதியின் இளைய மகள் குறுக்கு சாலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்..
இந்த நிலையில் மாணவி நேற்று மாலை வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த அதிர்ச்சி சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வேடநத்தம் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் இரவு முழுதும் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 6 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், மேலும், கூடுதலாக 4 தனிப்படைகள் என மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது..
ஆனால், குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் எனவும், உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆறு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்தப் போராட்டத்தால் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இந்த நிலையில், திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. பின்னர், மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. இருந்தும் போராட்டத்தை உறவினர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் கைவிடுவதாக தெரியவில்லை..
இது ஒருபுறம் இருக்க, குற்றவாளியை கைது செய்யாததால் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறிய நிலையில் அந்த மாணவியின் உடல் தூத்துக்குடியில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது..
உடற்கூறு ஆய்வில், தொண்டை எலும்பு, கழுத்து எலும்பு உடைந்து உள்ளதாக முதற்கட்ட தகவலானது வெளியாகி உள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய திருநெல்வேலியில் உள்ள தடய அறிவியல் மையத்திற்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தந்தை சுப்புராஜ் கூறும்போது, எனது பிள்ளையே போய்விட்டது எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம்… எனக்கு குற்றவாளிகளை கண்டுபிடித்து கண் முன் நிறுத்த வேண்டும்.. விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை பணி இடை நீக்கம் செய்தது எங்களுக்கு திருப்திகரமாக இல்லை உடனடியாக அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
மேலும், குளத்தூர் உதவி ஆய்வாளர் செல்வராஜ் என்பவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்..
மர்மமான முறையில் உயிரிழந்த இந்த மாணவி கொலை காரணம் குறித்து இரண்டு நாட்கள் ஆகியும் போலீசார் இன்று வரை ஒருவரையும் கைது செய்யப்படாதது மிகப்பெரிய அளவில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் தான் ஏற்படுத்தி இருக்கிறது..