ஆரோவில் உதய தினத்தையொட்டி நடந்த போன் பயர் நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு கூட்டு தியானம் செய்தனர். புதுவை அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. இந்த நகரத்தை உருவாக்க அன்னை மீரா அல்பாசா தலைமையில் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கியது. அதனையொட்டி, ஆண்டுதோறும் ஆரோவில் உதய தினம் பிப் 28-ந் தேதி ஆரோவில் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் இன்று ஆரோவில் 55-ம் ஆண்டு உதய தினத்தையொட்டி அதிகாலை ஆரோவில் ஆம்பி தியேட்டரில் போன் பயருடன் கூட்டு தியானம் நடைபெற்றது. இதில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் கலந்துகொண்டு உலக அமைதி வேண்டி கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆரோவில் முழுவதும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.