இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதலே தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தியது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி யில் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை திருப்பெரும்புதூர் வட்டாட்சியரும், திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் துணை அலுவலருமான திருமதி. D. வசந்தி கொடியசைத்து துவக்கி வைத்து மாணவ மாணவிகளோடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியில் கலந்து கொண்டார்.
18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கும் உரிமை பெற வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், 100 சதவீத வாக்குப்பதிவு செலுத்த வேண்டும். லஞ்சம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்களை கையில் ஏந்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.