கோவை

கென் கருணாஸ் இயக்கத்தில் அவர் உட்பட அனிஷ்மா அருள்குமார், மீனாட்சி தினேஷ் ஆகியோர் நடிப்பில் தயாரிப்பாளர் கருப் தயாரிப்பில் உருவாகியுள்ள YOUTH திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது.

பட குழுவினர் பல்வேறு பகுதிகளில் திரையரங்கிற்கு நேரடியாக சென்று பார்வையாளர்களிடம் திரைப்படம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். அதன்படி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கிற்கு வருகை தந்த படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

படத்தின் இயக்குனரும் நடிகருமான கென்கருனாஸ், அனிஷ்மா அருள்குமார், மீனாட்சி தினேஷ், அபிஷன் தேவர்ஷா, தயாரிப்பாளர் கருப் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது ஒவ்வொருவரும் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் தற்பொழுது இந்த படத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள வரவேற்பு குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்தசெய்தியாளர் சந்திப்பில் பேட்டியளித்த கென்கருணாஸ், அனைத்து பகுதிகளிலும் இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அது எங்கள் படக்குழுவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

கதை எழுதும் பொழுதே சுராஜ் மற்றும் பசுபதி ஆகிய இருவரும் தான் நடிப்பது போன்று திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் பசுபதி நடிப்பதற்கு தேதிகளுக்கு கிடைப்பதில் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் சுராஜ் அவருக்கும் நடிப்பதற்கும் தேதிகளுக்கு கிடைக்கப்பெறவில்லை பிறகு தயாரிப்பாளர் ஏதோ நிகழ்விற்கு சென்றிருந்த போது சுராஜிடம் பேசி இறுதி செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த படத்தை எடுக்கும் பொழுது தங்களுக்கு அட்வைஸ் கொடுப்பதற்கும் நன்கு அனுபவம் வாய்ந்த ஒருவர் தேவைபட்டார் அப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த ஒருவர் நம் திரைப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் அப்பொழுது ஜிவி பிரகாஷை முடிவு செய்ததாகவும் ஜி வி பிரகாஷும் தனக்கும் தங்கள் குழுவினருக்கும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.

தனக்கு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையே இருந்ததில்லை ஆனால் இயக்குனர் ஆன பிறகு தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். அசுரன் விடுதலை ஆகிய படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களை மட்டுமே நடித்ததால் அது போன்ற கதாபாத்திரங்கள் மட்டுமே தொடர்ச்சியான படங்களில் தனக்கு கிடைத்ததாகவும் அப்படி இருக்கும் பொழுது ஒரே மாதிரி இருக்கக் கூடாது என்பதற்காகவும் வேற எந்த இயக்குனரும் மாற்று கதாபாத்திரத்தை கொடுப்பதற்கு முன் வராததாலும் இந்த படத்தை ஜாலியாக இயக்கியதாக குறிப்பிட்டார்.

செய்தியாளர் ஒருவர் தணிக்கை குழு சம்பந்தமாக கேள்வி எழுப்பிய பொழுது தணிக்கை குழுவா அப்படி என்றால் என்ன? என்று கென்கருணாஸ் புரியாமல் கேள்வி எழுப்பினார் பிறகு அது சென்சார் போர்டு என்று செய்தியாளர்கள் விளக்கமளித்தனர். சென்சார் போர்டு பக்கத்திலிருந்து எந்த ஒரு சிக்கலும் தங்களுக்கு இல்லை அவர்களின் வழிகாட்டுதலுக்குள் நாம் படத்தை எடுத்தால் எந்த ஒரு சிக்கலும் வராது என்று தயாரிப்பாளர் கருப் தெரிவித்தார். மேலும் அவர்களின் சப்போர்ட்டும் தங்களுக்கு இருந்ததாக கென் கருணாஸ் தெரிவித்தார்.

புதியவர்கள் வருகை சினிமாவில் மிகவும் நன்றாக இருப்பதாகவும் பலரும் உறுதுணையாக இருப்பதாகவும் குறிப்பிட்ட படக்குழுவினர் நல்ல படம் எடுத்தால் அனைவரும் அதனை ஆதரிப்பார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கென் கருணாஸ் இந்த படம் விளையாட்டுத்தனமாக பேசிக் கொண்டிருந்த பொழுது ஆரம்பித்ததாகவும் முதலில் மொபைலில் தான் எடுத்தோம் பிறகு அது படிப்படியாக உயர்ந்து ஒரு படமாக எடுத்துள்ளோம் தங்கள் படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டதை கூட தங்களால் நம்ப முடியவில்லை என கூறினார். நடிகர் சிம்பு படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருந்தது என்று ட்விட் செய்துள்ளார்.

அது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தன்னுடைய அப்பா அம்மாவும் இந்த படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் எமோஷனல் ஆகிவிட்டனர் அது ஒரு மகனாக தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்ததாக தெரிவித்தார்.

கென் கருணாஸிடம் அரசியல் தொடர்பான கேள்வி எழுப்பியதற்கு நான் அரசியலுக்கு வர மாட்டேன் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்னுடைய அப்பாவின் வாழ்க்கையே வேறு என்னுடைய வாழ்க்கை வேறு என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *