தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகி சீரழிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுங்குவார்சத்திரம் அருகே காந்தூர் கிராமத்தில் வீட்டுமனை விற்பனை செய்யும் இடத்தில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை நடப்பதாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் ஆனது கிடைக்கப்பெற்றது.
இதனை அடுத்து தகவலின் பெயரில் விரைந்து குழுவாக சென்ற போலீசாரை கண்டதும் அங்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த இருவர் தப்பி ஓடினர். அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த கண்ணு சரவணா பிஷாய் (29) மற்றும் மிலு குமார் பிஷாய் என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 735 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில்
திருவள்ளூர் மாவட்டம் திருப்பஞ்சூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அங்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீசார் இருவரும் பதுக்கி வைத்திருந்த 31 கிலோ 460 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து மேற்படி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காவல்துறையினர் ஒரே நாளில் 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த சம்பவம் திருப்பெரும்புதூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.