தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ம. கலாமணி ஜெகநாதன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வடக்கு வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வினோத் குமாரிடம் அவர் மனுவை சமர்ப்பித்தார். இதற்காக அவர் தொண்டர்களுடன் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து உற்சாகமாக மனு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் ஒரே நாளில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே கவுண்டம்பாளையம் தொகுதியில் ம. கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தத் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கு வருவதில்லை.அதனால் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது” என்றார். மேலும்,மற்ற கட்சிகள் “ஓட்டுக்கு பணம் வழங்குவதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தார்.