தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஆயிரக்கணக்கான போலீஸார், மத்திய துணை ராணுவப் படையினர் (CISF),எல்லை பாதுகாப்பு படையினர் (BSF)பாதுகாப்பு ஒத்திகை மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளைக்கண்டறிந்து பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர் பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வாக்குசாவடி மையத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் எல்லை பாதுகாப்பு படையினர், மற்றும் போலீசார் இணைந்து நடத்திய கொடி அணிவகுப்பு பேரணி வடலூரில் நடைபெற்றது. இந்தப்பேரணியில் துப்பாக்கி ஏந்தியபடி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வடலூர் ராகவேந்திரா சிட்டி நகரில் தொடங்கி, பின்னர் பேருந்துநிலையம், பொதுமக்கள் வசிக்கும் பகுதி வழியாக சென்று சத்தியஞான சபை அருகே நிறைவு பெற்றது. இதில் நெய்வேலி வடலூர் இன்ஸ்பெக்டர்சுரேஷ்,உதவிஆய்வாளர்கள் முகிலரசு, சேகர்,சிறப்பு உதவிஆய்வாளர் முருகன் மற்றும் காவல் துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.