நாமக்கல்,
ஏப்.11:
நாமக்கல் மாநகரில், அதிமுக வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர், பழைய பஸ் ஸ்டாண்டிற்குள் அனைத்து பஸ்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் உடன் சென்று ஆதரவு திரட்டினார்.
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளராக, கட்சியின் மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் ஸ்ரீதேவி மோகன் போட்டியிடுகிறார். இவர் நேற்று மாலை, நாமக்கல் மூன்று சிலை, லைன் தெரு, கடைவீதி, வண்டிக்காரத் தெரு, மலையாண்டி தெரு, தூபன்குமாரசாமி தெரு, மேட்டுத்தெரு, நடராஜபுரம், வெலிங்டன் தெரு, மாரிகங்கானி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த பிரசாரத்தின்போது வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் பேசியதாவது:
”நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஆதரவு அளிக்க வேண்டும். சாதாரண குடும்பத்தில் இருந்து தான் நான் வந்துள்ளேன். இதனால் பொதுமக்களின் கஷ்டங்கள் எனக்குத் தெரியும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்.
பெண்களுக்கு மாதம் ரூ. 2,000.
இல்லத்தரசிகளுக்கு இலவச பிரிட்ஜ்.
ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்.
அனைத்து குடும்பத்தினருக்கும் சிறப்பு நிதி ரூ. 10 ஆயிரம்.
என பல வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அந்தத் திட்டங்கள் எல்லாம் கிடைத்திட அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்த உடன், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்கப்படும்.”
இவ்வாறு வேட்பாளர் ஸ்ரீதேவி மோகன் தெரிவித்தார். பிரசாரத்தின் போது வேட்பாளருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். நாமக்கல் மாநகர அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் மயிலசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் ஆட்டோ ராஜா, முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் விஜய் பாபு, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுசாமி மற்றும் ஏராளமான அதிமுகவினருடன் சென்று வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
முன்னதாக, நாமக்கல் மாநகர அலுவலகம் வந்த வேட்பாளர் ஸ்ரீதேவி மோகனுக்கு, மாநகர செயலாளர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.