திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கூத்தம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவர் சேர்க்கை விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வை தெள்ளார் வட்டார கல்வி அலுவலர்கள் கோ. குணசேகரன், எ.பச்சையப்பன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மேலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில் முருகன், ஆசிரியர் பயிற்றுநர் ராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்பு தலைமை ஆசிரியர் என்.கெங்கன் தலைமை தாங்கினார். இடைநிலை ஆசிரியர் பி.முருகதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி மாணவர்கள் பலரும் பங்கேற்று பள்ளிக்கான பல்வேறு நல உதவி திட்டங்களையும், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் வழங்கினர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியர்களை காலில் விழுந்து வணங்கி வாழ்த்துக்களை பெற்றனர். முன்னதாக E.தேன்மொழி மேற்பார்வையில் பள்ளி நூற்றாண்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.