பெரம்பலூர். ஏப்.21. பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் எசனை, கீழக்கரை, எளம்பலூர் ஊராட்சிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காட்டு மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு புறப்பட்டவர் பாப்பாங்கரை, எசனை, கீழக்கரையில் உள்ள முக்கிய வீதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
எசனை கீழக்கரையில் வரவேற்பளித்த அதிமுக ஒன்றிய பொருளாளர் பன்னீர்செல்வம் வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வனுக்கு வேல் ஒன்றை பரிசாக அளித்து கீழக்கரை கிராமத்திற்கு வரவேற்றார். பின்னர் வேட்பாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன் பேசியதாவது.
கடந்த காலங்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எசனை கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம், துணை மின் நிலையம், அஞ்சுகம் குடியிருப்பு வழியாக ஜெ. ஜெ நகருக்கு ரூபாய் 30 லட்சத்தில் தார் சாலை அமைத்துக் கொடுத்தேன். தற்போது பாப்பாங்கரை பகுதிக்கு புதிய தார்சாலை அமைத்து கொடுப்பேன் என்றும், இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத போதும், வெற்றி இழந்த போதும் இப்பகுதி தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்கள் நூலகத்திற்காக உதவியை கேட்டனர்.
நான் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எனது சொந்த செலவில் செய்து கொடுத்தேன். கழிவு நீர் வாய்க்காலை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சென்றவர் திரும்பி கூட பார்க்கவில்லை. நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், வாய்க்காலை சீர் செய்வதுடன் ஊர் மக்கள் குடிக்க ஆர் ஓ வாட்டர் செய்து தருவேன் என்றும், ஆறு மாதமாக பயனற்று கிடக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அகற்றப்பட்டு ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியாக மாற்றி தருவேன் என்று பேசினார்.
பின்னர் தனது சொந்த ஊரான எளம்பலூரில் வாக்கு சேகரிப்பில் பேசும் போது ஓட்டு கேட்டு உங்களை நாடி உங்கள் இல்லங்களை தேடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன் என்றும், நீங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளை உங்கள் வீட்டுப் பிள்ளை தமிழ்ச்செல்வன் ஆகையால், இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், விவசாய கடன்கள் ரத்து செய்யப்பட தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக எடப்பாடியார் வந்தவுடன் முதல் கையெழுத்து தாய்மார்களின் வங்கி கணக்கில் ரூபாய் 10 ஆயிரம் வரவு வைத்திட பல்வேறு திட்டங்களை நம்முடைய பகுதிக்கு கொண்டு வந்திட, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்ய, மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையை கொண்டு அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தான் 10 ஆண்டுகால சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சாலை வசதிகள், குடிநீர் வசதி மற்றும் கால்நடை மருந்தகம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். பெரம்பலூர் ரிங் ரோடு இணைப்பு சாலை மற்றும் திருமங்கலியம்மன் கோயில் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளை அமைத்து உள்ளேன். எட்டாம் வகுப்பு வரை இருந்த பள்ளியை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மாணவர்கள் இங்கே படிக்கும் வசதி ஏற்படுத்தி உள்ளேன் என்றும் பேசினார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, எளம்பலூரிலிருந்து சென்றால் எந்த பகுதிக்கும் செல்லுகிற பளபளப்பான தார் சாலை என்று ஒரு நவீனமான எளம்பலூரை உருவாக்கிய உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு வாய்ப்பு தாருங்கள், வெற்றி பெற செய்யுங்கள் என்று பாதம் பணிந்து கேட்டு நன்றியோடு விடைபெறுகிறேன் நன்றி என பேசினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா. தமிழ்ச்செல்வனுக்கு ஊர்மக்கள் அதிர்வேட்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.