கோவை

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பேட்டி…

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கோவை காட்டூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்,முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை வேட்பாளராக அறிவித்த பின்னர், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்களுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். திமுக 2.0 ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் குறித்து விரிவான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கோவை மாவட்ட வளர்ச்சிக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ₹1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார். இதில் ₹50 ஆயிரம் கோடி தொழில்துறை விரிவாக்கத்திற்காக புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், மீதமுள்ள ₹50 ஆயிரம் கோடி உள்ளாட்சி உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் கோவையின் உள்நாட்டு உற்பத்தியை 15 சதவீதம் அதிகரிக்கும் இலக்குடன் செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜவுளித்துறை வளர்ச்சி, சிறு மற்றும் குறு தொழில்கள் மேம்பாடு, தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுதல், சேவை உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட 11 முக்கிய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

நொய்யல் ஆற்றை சீரமைத்தல், நீர் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி திட்டங்கள், மின் துறை மேம்பாடு, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், டிகே மார்க்கெட்டில் கார் பார்க்கிங் வசதி உள்ளிட்ட 15 முக்கிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. மேலும், ஆழியாறு–நல்லாறு திட்டம் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கோவையில் ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், கிழக்கு புறநகர் சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் கூறினார். வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனைக்கு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

அரசியல் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளித்த அவர், “தேர்தலில் தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்,” என்றார். தேர்தல் காலத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

கோவை நகரை தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு வர விரிவான வளர்ச்சி திட்டங்களை முன்வைத்துள்ளதாக செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *