திருமருகல் செய்தியாளர் தி. சரவணன்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமருகல், ஆலத்தூர், எரவாஞ்சேரி, மருங்கூர், நெய் குப்பை, திருக்கண்ணபுரம், அம்பல், போலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கோடை பயிராக அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தற்போது பருத்தி செடிகள் பூ, பூத்து காய் வைக்கும் பருவம் ஆகும். பல விவசாயிகள் பருத்தி செடிகளுக்கு இன்னும் மண் அணைக்காமல் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பருத்தி செடிகள் இடையே மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்பதால் செடிகள் வளர்ச்சி குறைந்து உள்ளது. மேலும் மழை காரணமாக பருத்தி செடிகளில் பூத்திருந்த பூக்கள், உதிர்ந்து பெரிய அளவில் மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்ததால் பருத்தி செடிகளில் வேர் அழுகி சாகுபடி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.