தூத்துக்குடி சமூக வலைதள அரசியல் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கத்தை சிதைக்கும் அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், மக்களுக்காக உண்மையாக உழைக்கும் நபர்களை மறைத்து போலியான பிரபலங்களை உருவாக்கும் சூழல் நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய அரசியலில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஹேஷ்டேக் ட்ரெண்டிங், ரசிகர் பக்கங்கள், வைரல் வீடியோக்கள் போன்றவற்றின் மூலம் எந்த ஒரு நபரையும் பெரிய தலைவராக காட்ட முடியும். தகுதி இல்லாத ஒருவரைக் கூட ‘இவரால் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் இவரால் மட்டுமே மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்’ என்று திட்டமிட்டு போலியான பிரச்சாரங்கள் மூலம் மக்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்படும் இத்தகைய பொய்யான புகழ் அரசியல் காரணமாக, உண்மையாக மக்களுக்காக உழைக்கும் நல்ல மனிதர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தலைவர்கள் மக்களின் பார்வையில் இருந்து மறைக்கப்படுகின்றனர்.
இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. சமூக வலைதளங்களின் சக்தியால் தகுதியற்ற ஒரு நபரை தகுதியுடையாவராக மாற்ற முடிகிறது. இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி, செயற்கையாக உருவாக்கப்படும் ஆதரவு அலைகள் மூலம் அரசியல் செல்வாக்கு உருவாக்கப்படுகிறது. ஆனால் ஏழை மக்களின் பசி, விவசாயியின் வேதனை, தொழிலாளியின் கண்ணீர், நடுத்தர மக்களின் பொருளாதார சுமை போன்றவை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகவில்லை.
சில சமூக வலைதள பக்கங்கள் தவறான வாழ்க்கை முறைகளை கொண்ட நபர்களை கூட முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால் சமூக நலனுக்காக பாடுபடும் நபர்கள், ஏழை மக்களின் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து பேசுபவர்கள் முன்னிலை படுத்தபடுவதுயில்லை ஒரு நாட்டை வழி நடத்த வருபவர் மக்களின் வாழ்க்கை வலியை உணர்ந்தவராக இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தை புரிந்தவராகவும், மக்கள் தேவைகளை சட்டமாக்கக் கூடியவராகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்னேற்றம் தரக்கூடிய திட்டங்களை செயல்படுத்தக் கூடியவராகவும் இருக்க வேண்டும். வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் சூழ்நிலையால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சமூக வலைதளங்களில் எதிர்மறையாகவும் உண்மைக்கு புறம்பாகவும் பதிவிடுவது மக்கள் மத்தியில் தவறான கருத்தை திணிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் தொடர்பான தகவல்களும் உண்மைத் தன்மையை அறியாமல் அதிகளவில் பகிரப்படுவது சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சமூக வலைதள ட்ரெண்டிங் மற்றும் போலியான புகழ் மூலம் உருவாகும் தலைமைத்துவத்தால் நாட்டின் பொருளாதாரத்தை சீர்படுத்த முடியாது. வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி, ஏழை மக்களின் வாழ்வாதார சிக்கல்கள் போன்றவற்றுக்கு தீர்வு காண முடியாது. எனவே மக்கள் சமூக வலைதள பிரச்சாரங்களையும், செயற்கை புகழையும் மட்டும் நம்பாமல், மக்களின் உண்மையான தேவைகளை உணர்ந்து செயல்படக்கூடிய தலைமைத்துவத்தை தேர்வு செய்ய வேண்டும் என வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.