நாகப்பட்டினம், மே. 27 திருமருகலில் ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றி அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ஆபத்தான மின்மாற்றி
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி கல்லுளி திருவாசல் தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்மாற்றியின் இரண்டு பக்க மின்கம்பங்களும் சேதமடைந்து சிமெண்ட் காரைகள் முழுவதும் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின்கம்பங்கள் எந்நேரத்திலும் சாய்ந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மின் மாற்றி கீழே விழுந்து உயிர்பலி ஏற்படுமோ? என்ற அச்சத்துடனே சென்று வருகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான மின்மாற்றியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.