திருவாரூர்
மேகதாது அணை கட்டுமான பணியினை கைவிட கோரியும், கர்நாடகா மற்றும் ஒன்றிய அரசுகளை கண்டித்தும் திருவாரூரில் ரயில் நிலையம் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அதன் தலைவர் கி.வீரமணி பேசியதாவது…, ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் காவிரி நதிநீர் ஆணையம் தீர்ப்பு என்பது தமிழகத்திற்கு சாதகமாக இல்லை. ஒரு வருடம் கூட அவர்கள் நதிநீர் ஆணைய தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு கொடுத்ததில்லை. மாறாக வெள்ள காலத்தில் மட்டுமே நீர் திறந்து விடப்படுகிறது.
இந்நிலையில் கொஞ்ச நஞ்சம் வந்து கொண்டிருக்கும் நீரையும் முழுமையாக தடுத்து தமிழகத்தை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணை கட்டுமான பணியினை மேற்கொள்வதற்கு கர்நாடகா அரசு முயன்று வருகிறது.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு வறுமை மற்றும் அபாயத்திற்கு செல்லும் நிலை ஏற்படும். குடிநீருக்கு கூட பஞ்சம் ஏற்படும் நிலை மாறும். எனவே தமிழகத்திற்கான உரிமைகளை காப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெறுகிறது.
உரிமைக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்து வருகிறோம். அணை கட்டுமான பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் நல்ல நீதியினை வழங்கும் என்று நம்புகிறோம். காவிரி நதிநீர் அங்கு உற்பத்தி ஆகிறது என்ற அகங்காரம் மற்றும் ஆணவத்தின் காரணமாக அணை கட்டுவதற்கு முயல்வது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும்.
ஏற்கனவே மேற்காசிய போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த அணை கட்டப்பட்டால் விவசாயிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அவர்களது வாழ்வாரம் கேள்விக்குறியாக மாறும் நிலை ஏற்படும்.
ஆனால் பிரதமரோ வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள், குவளையில் குடிப்பதற்கு நீர் கொடுங்கள் என்று தத்துவம் பேசி வருகிறார். சொல்லப்போனால் சாப்பிட கூட வேண்டாம், உணவு உற்பத்தியும் வேண்டாம் என்று கூறுவார் போல. மரங்களை விட்டுவிட்டு மழைக்காக யாகம் செய்கிறார்கள்.
மாநிலத்தில் காடு இருந்தால் கூட காய்கறிகளை உற்பத்தி செய்து விவசாயிகள் வாழலாம். ஆனால் அதைவிட மோசமாக பாலைவனமாக்கும் வகையில் அணை கட்டப்பட்டால் வரும் தலைமுறைக்கே ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே இருக்கின்ற உரிமையை பறிக்கின்ற சூழ்ச்சியாக அணைக்கட்டுமான பிரச்சனை இருந்து வருகிறது. ஆனால் இதைப் பற்றி தமிழக முதல்வர் எந்த நடவடிக்கை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை. அடுத்து என்ன செய்யப் போகிறார் என அவருக்கே தெரியாது.
இந்த ஆர்ப்பாட்டமானது துவக்கம் தான் முடிவல்ல. தமிழகத்தின் உரிமை நிலை நாட்டப்படும் வரையில் போராட்டம் நடைபெறும் என்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி தெரிவித்ததாவது… உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல் மேகதாது அணை கட்டுமான முயற்சி என்பது தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிக்கக்கூடிய ஒரு பேரபயமாகும்.
தமிழக அரசு இதில் வெறும் மௌனம் சாதிப்பதோ அல்லது மனு கொடுத்துவிட்டோம், தடுத்துநிறுத்துங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. திட்டவட்டமாக தமிழ்நாட்டிற்கு எப்படி பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்து அரசு பணியாற்றிட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் பிரதமரை சந்தித்தோம். கோரிக்கைகளை வைத்தோம் என்று சொல்வது ஒரு கட்டம். ஆனால் அதனையும் தாண்டி தமிழக அரசின் செயல்திட்டம் என்ன என்பதை பொதுமக்களுக்கு விளக்க வேண்டிய அவசியமும், அவசரமும் உண்டும்.
அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதை தாண்டி அரசிடம் இதனை தடுப்பதற்கு என்ன திட்டம் உள்ளது. 2 வகைகளில் செயல்படாமல். நீதிமன்றம் ஒரு வகையான போராட்ட களம். மற்றொன்று மக்கள் மன்றம்.
இதனை இரண்டையும் தமிழக அரசு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்ய வேண்டும். மேலும் தமிழகத்திற்கு உரிய நீரை கொடுக்க கூடாது என்பதற்கு கர்நாடகாவில் பிஜேபி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
அதன்படி தமிழகத்திற்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கர்நாடகா கட்சிகளை போன்று தமிழக கட்சிகளும் ஏற்பட வேண்டும். இதற்கான பணிகளை கட்சி தலைவர்கள் அரசியலின்றி பின்பற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்றார் .