கோவை சிங்கநல்லூரில் உள்ள பிரபல என்.ஜி. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய இரு புதிய சிறப்பு பிரிவுகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் துவக்கப்பட்டுள்ளன.
‘சுகம் குடல் மற்றும் பெருங்குடல் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் ‘மேம்படுத்தப்பட்ட நீரிழிவு பாத மருத்துவம் மற்றும் புண் பராமரிப்பு சிகிச்சை மையம்’ ஆகிய இந்த புதிய பிரிவுகளை, ‘வி தி லீடர்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலை திறந்து வைத்தார்.
என்.ஜி.மருத்துவமனையின் தலைவரும் இரைப்பை குடல் மருத்துவருமான டாக்டர்.சி.மனோகரன், திருமதி.தேன்மொழி, டாக்டர்.நிதிஷ் மற்றும் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
குடல் ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை நோய் பாத பராமரிப்புக்கான முழுமையான மருத்துவ வசதிகளை ஒரே கூரையின் கீழ் வழங்குவதே இந்த புதிய மையங்களின் முக்கிய நோக்கமாகும் என மருத்துவமனை தலைவர் டாக்டர் மனோகரன் தெரிவித்தார்..
நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை , இன்றைய நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் காரணமாக பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் தரம் குறைந்து வருவதும், பாக்கெட் உணவுகள் மற்றும் எண்ணெய் பலகாரங்களை அதிகமாக உட்கொள்வதும் மனித உடலில் செரிமான மண்டலத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன.
இதன் விளைவாக, சாதாரண செரிமானக் கோளாறுகள், வாயு தொந்தரவுகள் முதல் குடல் புற்றுநோய் வரை பல்வேறு தீவிரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் ‘பிரிவென்டிவ் ஹெல்த்கேர் முறையின் முக்கியத்துவம் தற்போது உலகளவில் அதிகரித்து வருகிறது.
மேலை நாடுகளில் பரவலாக இருக்கும் இந்த விழிப்புணர்வு, தற்போது நம் நாட்டிலும் மெல்ல தொடங்கப்பட்டுள்ளது. பிரச்னைகள் தீவிரமடைந்து லட்சக்கணக்கில் பணம் செலவழிப்பதை விட, ஆரம்ப நிலையிலேயே உடலின் தேவைகளையும் குறைபாடுகளையும் கண்டறிந்து தற்காத்துக் கொள்வது அவசியமாக இருப்பதாக அவர் கூறினார்..