தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் வாரந்தோறும் 2 நாள் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரண்டை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சுற்றி திரியும் தெருநாய்களின் கணக்கெடுப்பு நடத்தியதில் 358 தெரு நாய்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அனைத்து நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் சாம்பவர்வடகரை அரசு கால்நடை உதவி மருத்துவர் மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து இதுவரை 50 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சுரண்டை நகராட்சி பணியாளர்களால் தெரு நாய்கள் பாதுகாப்பான முறையில் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடைபெறும். இந்த திட்டம் தெருநாய்களுக்கு மட்டுமல்லாமல், வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கும் பொருந்தும் என நகராட்சி ஆணையாளர் கா.அசோக் தெரிவித்துள்ளார்.
எனவே சுரண்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏதேனும் நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ள வேண்டியிருப்பின் சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும் என ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.