அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் வாரச்சந்தையை கோயில் நிர்வாகமே தொடர்ந்து நடத்த வேண்டும்; வியாபாரிகள் வலியுறுத்தல்
மதுராந்தகம், ஜூலை 6:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட அச்சிறுப்பாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில், சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புகழ்பெற்ற வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர்.
இந்த வாரச்சந்தையில் காய்கறி, பழம், மளிகை, மீன், இரும்புப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இதுவரை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வாரச்சந்தை நடத்தப்பட்டபோது, கடைகளின் அளவுக்கேற்ப சிறிய கடைகளுக்கு ரூ.50 முதல் பெரிய கடைகளுக்கு ரூ.100 வரை மட்டுமே அடிமனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் சிறு வியாபாரிகளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் வியாபாரம் செய்து வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வாரச்சந்தை தனியார் குத்தகைக்கு விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதலின்படி சிறிய கடைகளுக்கு ரூ.100 மற்றும் பெரிய கடைகளுக்கு ரூ.200 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், குத்தகை எடுத்த நபர் அந்த விதிமுறைகளை பின்பற்றாமல், ஒரு கடைக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலித்ததாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஏற்கனவே ஒதுக்கப்பட்ட கடைகளின் முன்பாகவே மற்றொரு கடையை அமைக்க அனுமதி வழங்கி கூடுதல் அடிமனை கட்டணம் வசூலித்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக கடைகளுக்கு முன்பாக வாடிக்கையாளர்கள் நின்று பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டதோடு, விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், பல சிறு வியாபாரிகள் வருமான இழப்பை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் அவர்களின் வணிகத்தின் தன்மையை காரணம் காட்டி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், வாரந்தோறும் வரக்கூடிய வியாபாரிகளிடமிருந்து கூடுதல் தொகை பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி, வாரச்சந்தைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நிரந்தர கொட்டகைகள் அமைத்து சிலருக்கு மாதாந்திர அடிப்படையில் இடம் வழங்கி கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தற்காலிக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய இடவசதி குறைந்ததாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வாரச்சந்தை குத்தகைக்கு விடப்பட்ட காலகட்டத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறதா, வியாபாரிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுகிறதா என்பதை கோயில் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். முறையான கண்காணிப்பு நடைபெற்றிருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1, 2026 முதல் மீண்டும் ஆட்சீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகமே வாரச்சந்தையில் அடிமனை கட்டணத்தை நேரடியாக வசூலித்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மீண்டும் நிம்மதியடைந்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் வாரச்சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விடாமல் கோயில் நிர்வாகமே தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
மேலும், வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு கடைக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும், கடைகளின் அமைப்பு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இந்த புகழ்பெற்ற வாரச்சந்தையை தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே நடத்துவதற்கும், வியாபாரிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் நிரந்தர நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை உயரதிகாரிகள் உடனடி முடிவு எடுக்க வேண்டும் என்பது வாரச்சந்தைக்கு வரும் அனைத்து வியாபாரிகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பது வியாபாரிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.