சின்னமனூர், ஜூலை 6:
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதனைத் தொடர்ந்து, புதிய நியாய விலைக் கடையின் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி சேவையை தொடங்கி வைத்தார். இந்த புதிய கட்டிடம் மூலம் அப்பகுதி பொதுமக்கள் தரமான மற்றும் சீரான ரேஷன் சேவையை எளிதாகப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் ரா.து. கோபிநாத், நகர்மன்றத் தலைவர் அய்யம்மாள் ராமு, தேனி தெற்கு மாவட்ட திமுக பிரமுகர் பஞ்சாப் இரா. முத்துக்குமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு மேம்பட்ட வசதியுடன் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.