அந்தியூர்
ஜுலை, 9;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பர்கூர் மலைக்கிராம கர்ப்பிணிகளுக்கான சிறப்பு ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது.
ஜம்பை எஸ்எஸ்எம் பாரமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் தாளாளர் கே.எஸ்.இளவரசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற இம்முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமை வகித்தார். கல்லூரியின் இயக்குநர் சங்கமேஸ்வரன், பிசியோதெரபி கல்லூரி முதல்வர் ஜெ.தண்டபாணி முன்னிலை வகித்தனர். இதில், 15 மாணவியர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
பர்கூர் மலைக்கிராமத்தில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் ரத்த தானம் அளித்த அனைவருக்கும் அரசு ரத்த வங்கி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பார்மஸி கல்லூரி துணை முதல்வர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.