வடலூர், ஜூலை 9:
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு–2027 பணியை முன்னிட்டு, மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு வடலூர் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது.
வடலூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஒரு வீடும் விடுபடாமல், வீடு தோறும் மக்கள் தொகை விவரங்களை டிஜிட்டல் முறையில் மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
முதல் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, வடலூர் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு ஜூலை 13 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் மொபைல் செயலி மூலம் சுய பதிவேற்றம் செய்யும் வசதி ஜூலை 17 முதல் 31ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
வீடு தோறும் நேரடியாக நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் துரை, கணேசமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.