திருவாரூர் மாவட்டம், திருக்காரவாசலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலில், ஆனி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும், ‘ஆதி விடங்கர்’ எனப் போற்றப்படும் சிறப்புக்குரிய தாக விளங்கும் திருத்தலத்தில், ஒவ்வொரு மாதமும் வரும் பிரதோஷ நாட்களின் போது சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், மங்களகரமான ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.முன்னதாக, மாலை 4.30 மணி அளவில் தொடங்கிய பிரதோஷ கால பூஜையில், நந்தி பகவானுக்கு எண்ணெய், திரவியப் பொடி, மஞ்சள், பச்சரிசி மாவு, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், கரும்புச்சாறு மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.