பொள்ளாச்சி ஜூலை 26
இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்களான பெண் குழந்தையை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம், தூய்மை இந்தியா, பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம், மக்கள் வங்கி திட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு பாரத இயக்கம் குறித்தும் இரண்டு நாட்கள் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று பொள்ளாச்சியில் உள்ள மீனாட்சி மஹால் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் காலை நிகழ்வில் பாலநாகேந்திரன், உதவி இயக்குனர், மத்திய மக்கள் தொடர்பகம், சென்னை தலைமையுரையாற்றினார், எஸ். ரினோ ஜான், விஞ்ஞானி, இந்திய தர நிர்ணய அமைவனம், கோயம்பத்தூர் மற்றும் எம். சுகன்யா இயக்குனர், கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், கோயம்பத்தூர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்
முன்னதாக மத்திய மக்கள் தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் எஸ் ஆர் சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார்.ஜெ. நவீன்குமார் காவல் துணை கண்காணிப்பாளர், பொள்ளாச்சி கலந்து கொண்டு போதை ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே சிறப்புரையாற்றினர். போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றது. முடிவில் மத்திய மக்கள் தொடர்பு கள விளம்பர உதவியாளர் எம் தியாகராஜன் நன்றியுரை கூறினார்.