பொள்ளாச்சி, ஜுலை. 26- பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலை போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்கம், அரிமா சங்கம் மற்றும் ஈமச்சடங்கு அறக்கட்டளை ஆகியன இணைந்து மாநில அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கலை போட்டிகளை நடத்தின.
முன்னாள் பிரதமர் வி.பி. சிங், முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் அமைச்சர் கக்கன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் மாறுவேட போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் போட்டிகளை துவக்கி வைத்தார். கல்லூரி மாணவர்கள், 1 முதல் 6ம் வகுப்பு வரை மற்றும் 7 முதல் 12ம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அரிமா சங்க கவர்னர் ராஜ்குமார், சமூக ஆர்வலர் நாகராஜ் உள்ளிட்டோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.