நாகப்பட்டினம்,ஜூலை.28-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம், கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பு பூஜை, அம்மனுக்கு அபிஷேக தீபாராதனையும், கர்ணன், தர்மர், கிருஷ்ணன், அம்பாள் பிறப்பு, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி தீமிதி உற்சவம் நேற்று முதல் நாள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மருளாளிகள், கிராமவாசிகள், விழாகுழுவினர் மற்றும் செங்குந்த மரபினர் செய்திருந்தனர்.