கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கோவையில் முதன்முறையாக ‘ஆதி சக்தி கண்காட்சி 2026’ நடைபெற்று வருகிறது.
சிவா அறக்கட்டளை மற்றும் பழங்குடியினர் முன்னேற்ற அமைப்பு சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தயாரிக்கும் பல்வேறு உற்பத்திப் பொருட்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெண்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் தொழில் முயற்சிகளை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்கள், இயற்கை சார்ந்த பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அவர்களின் உழைப்பையும் திறமைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கண்காட்சியை காண வரும் பார்வையாளர்களை கவரும் வகையில், ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருவதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் சிவா தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் பழங்குடியின மக்களின் திறமைகள் மற்றும் உற்பத்திப் பொருட்களை அறிந்து கொள்வதுடன், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள் திரளாக கண்காட்சிக்கு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.