நாகப்பட்டினம்,ஆக.17-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் மழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், திரவியப்பொடி, மஞ்சள் பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் உலக நன்மை வேண்டி கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் சுமங்கலி பெண்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் பரம்பரை அறங்காவலர் அழகன் என்கின்ற சௌரிராஜன் மற்றும் செங்குந்த மரபினர், கிராமவாசிகள் செய்திருந்தனர்.