ஒரே கட்டமாக நடத்தப்படும் நீட் தேர்வு முறையில் பரிசீலனை தேவை ஜே.என்.யு. துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்

34 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இணையாக இந்திய மாணவர்களின் திறன் மற்றும் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் வகையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல்விக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் கோவையில் தெரிவித்தார்.

கோவை பேரூர் பகுதியில் சேரன் கல்வி குழுமங்களின் சுகாதார அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா தனியார் அரங்கில் நடைபெற்றது..

இதில், சிறப்பு விருந்தினராக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் உயர்கல்வி,நீட் தேர்வு முறைகள் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், உலக நாடுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப நமது கல்வி முறையிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட வேண்டும். மாணவர்களுக்கு திறன் சார்ந்த மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வழங்கப்படுவது அவசியம். கல்வி பயிலும் மாணவர்கள் அரசு வேலைவாய்ப்புகளை மட்டுமே எதிர்பார்க்காமல், தொழில்முனைவோராக உருவாகி, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நிலைக்கு வர வேண்டும். இதற்கேற்ப கல்விக் கொள்கையில் தொடர்ச்சியான மாற்றங்கள் தேவை என்றார்.

உயர்கல்வியில் தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், தாய்மொழி கற்றல் அவசியமானது என்றாலும், ஆங்கிலத்துடன் மூன்றாவது மொழியையும் மாணவர்கள் கற்றுக்கொள்வது அவசியம். இதன்மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் நீட் போன்ற தேர்வுகளை ஒரே கட்டமாக நடத்துவதற்குப் பதிலாக, பல கட்டங்களாக நடத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றார்.

எவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இணையவழி திருட்டு மற்றும் தொழில்நுட்ப முறைகேடுகள் மூலம் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, தேர்வுகளை பல கட்டங்களாக நடத்துவது போன்ற மாற்று வழிகளைப் பரிசீலிப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்சினைகளை குறைக்க முடியும் என அவர் தெரிவித்தார்…
பின்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர் சிறப்புரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *