நாகப்பட்டினம்,ஆக.20-
திருப்புகலூர் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்கப்படுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சேதமடைந்த மின்கம்பம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி கருப்பூர், அரசூர் கிராமங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களுக்கு வவ்வாலடி மெயின் ரோட்டில் இருந்து சாலை ஓரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வசதி மற்றும் தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாலையோரம் உள்ள மின்கம்பம் ஒன்று கருவேலம் மரங்கள் மீது சாய்ந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் மின் பாதைகள் முழுவதும் பாதிக்கப்பட்டு தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் அரசூர், கருப்பூர் கிராம மக்கள் மற்றும் அம்பகரத்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் சாலை முழுவதும் இருள் சூழ்ந்து கிடப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் அந்த சாலையில் சென்று வர மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.