கோவை:
தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கம், கோயம்புத்தூர் பாரா த்ரோபால் சங்கம், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் மற்றும் புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய “5-வது தென்னக மண்டல மாற்றுத்திறனாளிகளுக்கான த்ரோபால் சாம்பியன்ஷிப் – 2026” போட்டி கோவை புலியகுளத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
”தடைகளைத் தாண்டி, வெற்றியை நோக்கி!” என்ற வீரமிக்க முழக்கத்துடன் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழா தொடங்கியது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, I.A.S. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அடிசியா டெவலப்பர்ஸ் தலைவர் மணிகண்டன், இந்திய பாரா த்ரோபால் கூட்டமைப்பின் தலைவர் ஆல்பர்ட் பிரேம்குமார், லட்சுமி செராமிக்ஸ் நிர்வாக இயக்குநர் S. முத்துராமன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர். கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தின் வசந்த ராமகுமார் மற்றும் கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் திருமதி புவனேஸ்வரி ஆகியோர் போட்டியினை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
தென்னக அளவிலான 6 முன்னணி மாற்றுத்திறனாளி அணிகள் பங்கேற்ற இந்த “சூப்பர் 6” (Super 6) சுற்றில், வீரர்கள் அனைவரும் தங்களது அசாதாரணமான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி விறுவிறுப்பாகப் போட்டியிட்டனர். இறுதியில் வெற்றி பெற்ற அணிக்கு மதிப்புமிக்க “டாக்டர் கிருஷ்ணந்தா நினைவுச் கோப்பை” மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு பாரா த்ரோபால் சங்கத் தலைவர் Rtn. MD. R. சரண், செயலாளர் Dr. Z. ஸ்டெஃபி ரோஷன், கல்லூரி முதல்வர் Dr. அனுஸ்மிதா செபஸ்டியான் மற்றும் போட்டி அமைப்பாளர் மோகன் குமார் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர். போட்டியில் திரளான பார்வையாளர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.