மன்னார்குடி., ஆக.25
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இரட்டைப்புலி பகுதியில் அமைந்துள்ள வராகி அம்மன் மற்றும் சொர்ண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மன்னார்குடி–திருத்துறைப்பூண்டி சாலையில் இரட்டைப்புலி பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவாக யாகசாலையில் பூர்ணாஹுதி நடைபெற்றது.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து வராகி அம்மன் மற்றும் சொர்ண பைரவருக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகி அம்மன் மற்றும் சொர்ண பைரவரை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக விழா ஏற்பாட்டாளர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.