ந.மணிவண்ணன் செய்தியாளர்


தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டிவிட்டு, அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வட்டாட்சியர் பயன்படுத்தும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருவதால் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமல்லாமல், அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திடீர் சோதனை நடைபெற்றதால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் சேவை பெற முடியாமல் தவித்தனர்.

இந்த சோதனைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், லஞ்ச புகார் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *