கோவையைச் சேர்ந்த புவன தர்மம் அறக்கட்டளை சார்பில், முதியோரின் மருத்துவத் தேவைகள் மற்றும் அவசர கால உதவிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘அபயம்’ என்ற புதிய முதியோர் நல உதவி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மூத்த இதயநோய் சிகிச்சை நிபுணரும், பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் தலைமையில் செயல்படும் புவன தர்மம் அறக்கட்டளை, கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டு, கலாசாரம், கல்வி, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறது.
‘அபயம்’ சேவையின் மூலம் முதியோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் , இருபத்துநான்கு மணிநேரமும் வாரத்தின் ஏழு நாட்களிலும் (24 X 7) மருத்துவ உதவியைப் பெற முடியும். புறநோயாளர் சிகிச்சை, உள்நோயாளர் சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ உதவிகளை ஒருங்கிணைக்க 95146 92026 என்ற பிரத்யேக தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
‘அபயம்’ மூலம் வழங்கப்படும் மருத்துவ வழிகாட்டுதல் மற்றும் மருத்துவமனை தன்னார்வலர் ஒருங்கிணைப்பு சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த சேவையை பத்மஸ்ரீ டாக்டர் ஆர்.வி. ரமணி, சங்கரா கண் அறக்கட்டளை தலைவர், தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி மற்றும் இயக்குநர் சாந்தி துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதியோருக்கான முழுமையான ஆதரவு அமைப்பை உருவாக்கும் நோக்கில், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் செயல்படும் பிரயோஜனா நிறுவனத்துடன் ‘அபயம்’ இணைந்து செயல்படுகிறது.‘அபயம்’ மருத்துவ வழிகாட்டுதல், இதயநோய் ஆலோசனை மற்றும் மருத்துவமனை வருகை ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் வகையிலும், பிரயோஜனா நிறுவனம் வீட்டிலேயே முதியோருக்கான தேவைகள், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் துணை சேவைகளை வழங்கும்.
விநாயகர் சதுர்த்தி 2026 தினம் முதல் அதாவது 14.09.2026 முதல் இச்சேவை முழுமையாக செயல்படத் தொடங்கும். மேலும், ‘அபயம்’ மொபைல் செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டு அவை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன