நாகப்பட்டினம், செப்.7-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் கடந்த ஒரு மாதங்களாக வழங்கப்படாததை கண்டித்து நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலை திருப்புகலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஒரு மாத காலமாக ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர், திருக்கண்ணபுரம் வருவாய் ஆய்வாளர் குமுதா மற்றும் வருவாய் துறையினர், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.