திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் வயது 43; லாரி டிரைவர்.சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார் இந்நிலையில் அருணாசலம் கடந்த 17ம் தேதி மதுரையில் இருந்து அரசி லோடு ஏற்றிக்கொண்டு புதுச்சேரி திருபுவனை பகுதிக்கு சென்றார்.
அங்கே அரிசி மூட்டைகளை இறக்கி விட்டு, அடுத்த லோடு எடுப்பதற்காக விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் இரவு ஒரு மணி அளவில் கண்டமங்கலம் அடுத்த எம்.என் குப்பம் மேம்பாலம் சர்வீஸ் ரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் மூன்று பேர் டிரைவர் அருணாசலத்தின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் மற்றும் மொபைல் போனை கொடுக்குமாறு மிரட்டி உள்ளனர்.
அவர் மறுக்கவே கழுத்தில் கத்தியால் குத்தி ரூ. 57 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய மொபைல் போனை பறித்துக் கொண்டனர்.
மேலும் அருகில் நின்றிருந்த கேஸ் சிலிண்டர் லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடமிருந்து ரூ. 800 ரொக்க பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து அருணாசலம், சம்பத் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியா சப்-இன்ஸ்பெக்டர் காத்த முத்து ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் கண்டமங்கலம் போலீசார் தென்னல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது புதுச்சேரியில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர் இதனால் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் புதுச்சேரி மாநிலம் உறுவையாறு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (24) ராமச்சந்திரன் (24) என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் லாரி டிரைவரை கத்தியை காட்டி செல்போன் மற்றும் பணம் பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனை எடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.