நாகப்பட்டினம்,செப்.10-
கட்டுமாவடி-கொத்தமங்கலம் ஊராட்சிகளுக்கு இடையே சாலை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை வசதி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி-கொத்தமங்கலம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் துண்டம் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கட்டுமாவடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில் கொத்தமங்கலம் கட்டுமாவடி ஊராட்சிகளை இணைக்கும் வயல்வெளியில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால் மழை வெள்ள காலங்களில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் பள்ளி மாணவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என ஆபத்தான நிலையில் மண் சாலையை 30 ஆண்டு காலமாக கடந்து வருகின்றனர். மேலும் இரு புறமும் வயல்வெளிகள் இருப்பதால் இரவு நேரங்களில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. இப்பகுதியில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் வீடுகள் தோறும் அமைக்கப்படும் குடிநீர் குழாய்களும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு கொத்தமங்கலம்-கட்டுமாவடி ஊராட்சிகள் இடையே இணைப்பு சாலை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.