தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் முப்பெரும் விழா ஏலகிரி மலையில் உள்ள தனியார்ரிசார்ட்டில் நடைபெற்றது.
சங்க மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பேராசிரியர் கனகராஜ் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் எம்எல்ஏ திருப்பதி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ முகுந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளை வழங்கினர்.
விழாவில் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரத்தை விரைந்து வழங்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் செயல்படும் பள்ளிகளுக்கு அரசாணை எண் 76-ன் அடிப்படையில் டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், 2025-26-ஆம் ஆண்டுக்கான ஆர்டிஇ கல்விக் கட்டண நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கான ஆர்டிஇ கட்டணத்தை ரூ.6,000 என்ற வரம்பை மாற்றி, அரசு ஒரு மாணவருக்கு செலவிடும் தொகையை வழங்க வேண்டும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தனியார் பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட 150 சதவீத சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், தனியார் பள்ளிகள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், டிசி இல்லாமல் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்வதைத் தடுக்க வேண்டும், பொய்யான புகார்களின் அடிப்படையில் போக்சோ வழக்குகள் பதிவு செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் மாநில பொருளாளர் விமல், துணைப் பொதுச் செயலாளர் சண்முகம், கல்வி ஆலோசகர் எவர்வின் புருஷோத்தமன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் ராமானுஜம், மாவட்டச் செயலாளர் ஏலகிரி செல்வம், பொருளாளர் மணி, மாநில செய்தித் தொடர்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.