ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகன் தருண்குமார் (21), என்.சி.சி.யில் இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய நிலையில், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் BE ECE இறுதி ஆண்டு பயின்று வரும் தருண்குமார், இந்திய அளவில் என்.சி.சி.யில் AITSC சேவை எழுத்துப்பூர்வ ஆவணத்தை பெறுவதற்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் லெப்டினன் மேஜர் ஜெனரல் இந்திரா வாட்ஸ் அவர்களால் தருண்குமாருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி மற்றும் பி.மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் சார்பில், செப்டம்பர் 14ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய தருண்குமாருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தருண்குமாரின் தந்தை ஆறுமுகம் ஆட்டோ ஓட்டுநராகவும், அவரது தாயார் டைலர் தொழிலும் செய்து வருகின்றனர்.
தருண்குமாரின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பை பாராட்டிய பொதுமக்கள், அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஈரோடு மாவட்ட செயலாளர் வேல்முருகன் செய்திருந்தார்.