திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜடையனூர் பகுதியில் வேலுச்சாமி அவர்களால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் ரத்த கணபதி ஆலயத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதி மற்றும் உச்சிஷ்ட காளி மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி ஆலய வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உச்சிஷ்ட கணபதி மற்றும் உச்சிஷ்ட காளிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து, சுவாமிக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களை செய்து வழிபட்டனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
ஜடையனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பம்பை மேளம், செண்டை மேளம், பேண்டு வாத்தியங்கள் மற்றும் மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவிற்கு தொடர்ந்து வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ரத்த கணபதி ஆலயத்தில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டனர்.