காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ், குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பேரூராட்சி செயல் அலுவலர் யமுனாதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்குவதன் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதுடன், பேரூராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக தரம் பிரித்து, பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் நந்தகுமார், மேற்பார்வையாளர்கள் சதீஷ், தினேஷ், கண்ணதாசன், ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.