தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு.
தாராபுரம், திருப்பூர் சாலை ஊதியூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
பல்லடம் மாணிக்காபுரம் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (20), திருப்பூர் பெருந்தொழுவு ஹரிஷ் (20), செவந்தம்பாளையம் தீபக் (20), அறிவொளி நகர் கார்த்திகேயன் (20), திருப்பூர் இடுவாய் கோகுலகிருஷ்ணன் (20) இவர்கள் ஐந்து பேரும் சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதற்காக ஒரு காரில் கிளம்பி சென்றுள்ளனர். இரவு சுமார் 8 மணியளவில் திருப்பூர்-தாராபுரம் சாலை, என்.காஞ்சிபுரம் செங்காட்டு தோட்டம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து, தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், கதிர்வேல் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். மற்ற நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து ஊதியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.