திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வள மையத்தில் வலங்கைமான் ஒன்றியத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான வானவில் மன்ற கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றது.
இதில் 29 பள்ளிகளில் பயிலும் 72 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் சார்ந்த புதுமையான படைப்புகளுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர்கள் சுகந்தி, குமரேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மேலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் விஜயபாலன் மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மனப்பான்மை வளர்க்கும் விதமாக சிறப்புரை ஆற்றினார். வானவில் மன்ற வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜய், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மூன்று அறிவியல் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களின் படைப்புகள் மதிப்பீடு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
அதில் நார்த்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சரணிகா, வடக்கு பட்டம் ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளி தரண், ஆலங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி சுஷ்மிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் மதியம் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வலங்கைமான் வட்டார வள மையத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.