திருமக்கோட்டை.,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டை கிராமம் உள்ளது. திருமக்கோட்டையிலிருந்து பாலையக்கோட்டை வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சாலை செப்பணிடுவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் திருமக்கோட்டை, பாலையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், பாலையூர் நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பள்ளி , கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் , பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே பகுதியில் நெஞ்சு வலி ஏற்பட்ட நபர் ஒருவர் சாலை சரி இல்லாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில் உடனடியாக திருமக்கோட்டை முதல் பாளையக்கோட்டை வரை பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி திருமக்கோட்டை, பாலையக்கோட்டை,
புதுக்குடி, பரசபுரம், பாலையூர், நத்தம் உள்ளிட்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி வட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.