திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் மருந்து அதிகாரம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க குளிர்மை அரங்கில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். சிறப்பு தலைவர் சௌமா இராஜரத்தினம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்வில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீடு, கவிஞர் கவி செல்வாவின் கவிதை, ஆங்கரை பைரவியின் கதை சமகால இலக்கியங்கள் குறித்து கவிஞர் கலியமூர்த்தி உரைவீச்சு நடைபெற்றது.
மருந்து அதிகாரம் குறித்து மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் எம்.ஏ.அலீம் பேசுகையில்,மருந்து அதிகாரம் என்பது திருக்குறளின் பொருட்பால் அதிகாரங்களில் ஒன்றான 95வது அதிகாரமாகும். இந்த அதிகாரம் நோய்கள் வராமல் தடுப்பதற்கும், வந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கும் தேவையான வழிகளைப் பற்றி விளக்குகிறது. இதில் உணவின் ஒழுக்கம், சரியான உணவு முறை, நோய் வந்த பின் அதைத் தீர்ப்பதற்கான வழிகள், மற்றும் மருந்தாகச் செயல்படும் மருத்துவர், செவிலியர் போன்றவர்களின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உணவு எவ்வளவு முக்கியமோ, அதை விட உணவின் ஒழுக்கம் மிக முக்கியம் என வலியுறுத்துகிறது.
சரியான நேரத்தில், அளவாக, சத்தான உணவை உண்பது நோய்களைத் தடுக்கும் அடிப்படை ஒருவேளை நோய் வந்துவிட்டால், அதை எப்படிச் சரிசெய்வது என்பதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறது. வாதம், பித்தம், சிலேத்துமம் போன்ற மூன்று காரணங்களால் ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்கான வழிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றார்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் ஜவகர் ஆறுமுகம், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,துணைத் தலைவர் சூர்யா சுப்பிரமணியன் திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க அமைச்சர் உதயகுமார் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். முன்னதாக கவிச்செம்மல் கவிஞர் கோவிந்தசாமி வரவேற்க நிறைவாக அரிமா முகமது ஷபி நன்றி கூறினார்.